புதுச்சேரி: புதுச்சேரி பாஜ அலுவலகம் முன்பு காங்கிரசார் மோடி உருவ பொம்மையை எரித்த நிலையில், பாஜவினருடன் பயங்கர மோதல் ஏற்பட்டது. புதுச்சேரி பாஜக இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் காமராஜர் சாலையில் இருந்து பேரணியாக வைஷியாள் வீதியில் உள்ள புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்து, ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சென்றனர். இந்த விவகாரம் குறித்து ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் (47) பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உருவ பொம்மையை எரித்த பாஜகவினரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காங். தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் காமராஜர் சாலையில் இருந்து புறப்பட்டு ரெட்டியார்பாளையம் சித்தானந்தா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை, போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தடுப்புகளை மீறி வந்த காங்கிரசார், மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது, பாஜவினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி செருப்பு, கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதனால், மேலும் பதட்டம் ஏற்பட்டது.
அப்போது அங்கு திரண்ட, பாஜவினர் உருட்டு கட்டைகளுடன் பதில் தாக்குதலுக்கு சென்றனர். இரு பக்கமும் முன்னேறியவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல் வீச்சில் எஸ்பி வம்சிதர ரெட்டி உள்ளிட்ட 2 போலீசார், இரு கட்சிகளை சேர்ந்த 6 பேர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் பாஜ அலுவலகம் முன் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
