*மாணவிகள் பங்கேற்பு
கரூர் : தேசிய அளவிலான மொழி வரலாற்றின் தாக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் கரூர் ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்றுத் துறைகள் இணைந்து நடத்திய இந்த இரண்டு நாள் கருத்தரங்கை கல்லூரி தாளாளர் ராமசாமி தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் லட்சுமணசிங் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக இயக்குநர் சிவகாமி முன்னிலை வகித்தார்.
இக்கருத்தரங்கில் ஓலைச்சுவடி முதல் செயற்கை நுண்ணறிவு வரை கடந்து வந்த அறிவு மற்றும் அறிவியல் பாதைகளை மாணவ மாணவியர்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் பனை ஓலைச் சுவடியிலிருந்து இயந்திர நுண்ணறிவு வரை மொழி, இலக்கியம், மற்றும் வரலாறு எவ்வாறு வளர்ந்துள்ளது என்ற தலைப்பில் நடைபெற்றது.
பாண்டிச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் கண்ணன் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் வேலு ஆகியோர் முதல் நாள் கருத்தரங்கில் பங்கேற்று தங்களது கருத்துக்களை வழங்கினர். தங்களது கருத்துரையில் ஓலைச்சுவடிகள் உருவாகும் முறைகள் அதில் இடம் பெற்ற மொழிகள் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட செய்திகளைக் கூறினர்.
ஓலைச்சுவடிகள் பெரும்பாலும் மருத்துவம் ஜோதிடம், கோயில், வரலாறு போன்ற வரலாற்றுக் கலைக் களஞ்சியக் குறிப்புகள் அரசாட்சி முறைகள் மற்றும் பழமையான இலக்கியங்கள் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
சுவடிகளிலிருந்து அச்சுத்தாளில் பதிப்பிக்கப்பட்டு இன்று அனைவர் கைகளிலும் பயன்பாட்டிலுள்ள மென்பொருள் சாதனங்கள் வழி சித்தர்களும் யோகிகளும் புலவர்களும் எழுதிய அனைத்தும் நுண்ணறிவு வாயிலாக எளிமையாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இரண்டாம் நாள் கருத்தரங்கில் லால்குடி அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் வீரமணி சுவடிகளில் காணப்படும் மருத்துவ முறைகள் பற்றி பேசினார். சித்தோடு வாசவி கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் பிரகாஷ் உரையாற்றுகையில் பனையோலை முதல் செயற்கை நுண்ணறிவு வரை வரலாற்றுப் பதிவுகளை எடுத்துரைத்தார்.
தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் ஆண்ட போதும் மக்களுக்குத் தேவையான வரலாற்று இலக்கியங்களைப் பொக்கிஷமாக எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துரைத்தார்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கை துறைத்தலைவர்கள் கார்த்தி மகேந்திரன் மற்றும் பசுபதி மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.திருப்பூர் ஏவிபி கலைக்கல்லூரி வேடசந்தூர் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட மாணவ மாணவியர்கள் பெருமளவில் பங்குகொண்டு பயனடைந்தனர். பங்குகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.
