அரசு கொள்முதல் நிலையத்தில் அதிக விலை கிடைப்பதால் நெல் பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சென்னிமலை : அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிக விலை கிடைப்பதால் சென்னிமலையில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாற்று நடவு முதல் நெல் அறுவடை வரை நவீன இயந்திரங்கள் வந்து விட்டதாலும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் நல்ல விலை கிடைப்பதாலும் சென்னிமலை பகுதியில் இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்னிமலை வழியாக செல்லும் வாய்க்காலில் புஞ்சை சாகுபடிக்காக இரட்டை படை மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

இந்த தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிரிட்ட விவசாயிகள் தற்போது நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வாழை, மஞ்சள், கரும்பு பயிரிடுவதில் அதிக ஆர்வம் கொண்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதில் மட்டும் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக சென்னிமலை பகுதியில் அதிக அளவில் நெல் பயிரிட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டில் முருங்கத்தொழுவு, பசுவபட்டி, குப்பிச்சிபாளையம், எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர்களில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:

முன்பெல்லாம் நாற்றங்கால் அமைத்து நெல் நாற்று நடுவதற்கு ஆட்கள் வேண்டும். அதன் பிறகு நெல் அறுவடை செய்ய ஆட்கள் வேண்டும். நெற்கதிர் அடிப்பதற்கும், வைக்கோல் கட்டுவதற்கும் என தனித்தனியாக ஆட்கள் தேவைப்பட்டது.

இந்த பணிகளுக்காக எடப்பாடி, பழனி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தங்க வைக்க வேண்டும். நாளடைவில் இந்த ஆட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு நாற்று நடவு செய்ய முடியாமலும், நெல் அறுவடை செய்ய முடியாமலும் அவதிப்பட்டோம்.

அதேபோல் உற்பத்தி செய்த நெல்லுக்கும் போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால், நாங்கள் நெல் பயிரிடுவதை தவிர்த்து வந்தோம். ஆனால், தற்போது, நாற்று நடுதல், நெற்கதிர் அடித்தல் மற்றும் வைக்கோலை உருளையாக சுற்றுவதற்கு என தனித்தனியே இயந்திரங்கள் வந்து விட்டது.

இதனால், நாற்று நடுதல் முதல் நெல் அறுவடை வரை விவசாயிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படுவதில்லை. அதேபோல் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்முதல் நிலையங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விவசாயிகளுக்கு ஏற்ற விலையாக சன்ன ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.25.45க்கும், மோட்டா ரகம் ரூ.25க்கும் கொள்முதல் செய்கின்றனர். விற்பனை செய்யும் நெல்லுக்கு உண்டான பணத்தை 10 நாட்களில் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: