ஏரலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் மின்கம்பங்கள் இடமாற்றப்படாததால் தொடரும் போக்குவரத்து நெருக்கடி

*வாகன ஓட்டிகள் அவதி

ஏரல் : ஏரலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ள மின்கம்பங்களை இன்னும் இடமாற்றம் செய்யப்படாததால் போக்குவரத்து நெருக்கடி தொடருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், 3வது பெரிய வணிக நகரமாக உள்ளது.

இங்கு வியாபாரம், தொழில் சம்பந்தமாக தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள சினிமா தியேட்டர் அருகில் இருந்து காந்திசிலை பஸ் ஸ்டாப் வழியாக பஸ் நிலையம் வரையுள்ள சாலையில் 3 மருத்துவமனை, பெட்ரோல் பல்க், புகழ்பெற்ற சிவன் கோயில் மற்றும் அரசு மதுக்கடை உள்ளிட்டவை இருப்பதால் இவ்வழித்தடத்தில் அதிகளவு போக்குவரத்து நடந்து வருகிறது.

இதனால் மாலை நேரங்களில் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை உருவாகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து எழுந்த தொடர் புகாரையடுத்து கடந்த மாதம் நெடுஞ்சாலை துறை மூலம் ஏரல் சினிமா தியேட்டரில் இருந்து காந்திசிலை பஸ் ஸ்டாப் வழியாக பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் இருபுறம் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அப்போது சாலையில் நடுவில் போக்குவரத்து இடைஞ்சலாக உள்ள மின்கம்பங்களை இடமாற்றி அமைக்க வேண்டுமென வியாபாரிகள் வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதமாகியும் மின்கம்பங்களை இடமாற்றி அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடி என்பது இப்போதுவரை தொடருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள், ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் நிலையம் வரை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ள அனைத்து மின்கம்பங்களையும் அகற்றி இடமாற்றி நட வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிசங்கர் கூறுகையில், ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை மற்றும் வெளியூர் செல்லும் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவு வந்து செல்வதால் மாலை நேர பீக் அவரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு மாதமாகியும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் மின் டிரான்ஸ்பார்மை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றாததால் இந்த ரோட்டுக்கு தென்பகுதியில் இடம் இருந்தும் வாகனங்கள் அதில் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் நிலையம் வரையுள்ள ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க மின்கம்பங்களை அகற்றி மாற்றிநட வேண்டும், என்றனர்.

Related Stories: