ஊட்டி : ஊட்டி வட்டாரத்திற்கு உட்பட இத்தலார் கிராமத்தில் விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் பழம் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி மற்றும் பழம் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் உதகை வட்டாரத்திற்கு சார்ந்த அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தோட்டக்கலை உதவி இயக்குனர் பைசல் ஏற்பாட்டில் முதற்கட்டமாக இத்தலார் கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.
இத்தலார் ஊர் தலைவர் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயலட்சுமி, உதவி இயக்குநர் அனிதா ஆகியோர் பல்வேறு தோட்டக்கலை திட்டங்களைப் பற்றி சிறப்புரை ஆற்றினர்.
மேலும் வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்ந்த அலுவலகம் மண் பரிசோதனை நிலையம்,வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையம், பயிர் காப்பீட்டு நிறுவனம் போன்ற துறை சார்ந்த அலுவலர்கள், தமிழ்நாடு தோட்டக்கலை இயற்கை வேளாண்மை சங்கம் நீலகிரி மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் திட்டங்களை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளாக வழங்கினர். இதில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கங்களை புரிந்து கொண்டனர்.
