*1260 விவசாயிகள் பயன்பெறுவார்கள் கலெக்டர் தகவல்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்திற்கு ரூ.2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1260 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
தோட்டக்கலை இணை இயக்குநர் நவநீதா முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அதிகாரிகளிடம் இருந்து விவரம் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேசியதாவது: வரும் ஆண்டில் விவசாயிகளின் தேவைக்கேற்ப பட்டாணி மற்றும் ஊட்டி பீன்ஸ் விதைகள் ஊட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு 2025-26ம் நிதியாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மண் வள மேம்பாடு, இடுபொருட்கள் மானியம், உயிர் உரங்கள் விநியோகம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் விநிேயாகம், மண்புழு உரம்,டோலமடைட் விநியோகம், பூச்சி நோய் கட்டுபாடு, மண்புழு உர படுக்கை ஆகியவை விநியோகம் செய்திடவும், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கவும் ரூ.2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணி ஆணைகள் மற்றும் சப்ளை ஆர்டர்கள் வழங்கப்பட்டு இடுபொருட்கள் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் 1260 விவசாயிகள் பயனடைய உள்ளனர். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பல்வேறு அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வும், இயற்கை இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் உற்பத்தி குறித்த அனுபவங்களும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளுக்கு சந்தை வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகள் அறிந்துள்ளனர்.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்டையில் தேயிலை அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 173 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கூடலூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் வேளாண் வணிகத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
