கோவை : கோவை மாவட்டத்தில் தெருநாய்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், இதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த புறநகர் பகுதியிலும் நான்கு இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தெருக்கள், அரசு பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவமனை வளாகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் என ஒரு இடம்கூட விடாமல் எல்லா இடங்களிலும் இவை சுற்றுகின்றன. கூட்டம், கூட்டாக திரிவதுடன், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பதம் பார்க்கின்றன.
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றமும் தெருநாய்களை அப்புறப்படுத்த வழிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தெருநாய்களினால் ஏற்படும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 கால்நடை நிலையங்களை தேர்வுசெய்து, அங்கு தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் மற்றும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கோவை மாநகரில் 4 இடங்களில் மாநகராட்சி சார்பில் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. தற்போது கூடுதலாக, புறநகரிலும் 4 இடங்களில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளதால், விரைவில் தெருநாய்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இளங்கோ கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தெருக்களில் சுற்றும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், வெறிநாய்களின் மூலமாக பரவும் நோய்களை தடுக்கவும் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள், அன்னூர், பேரூர், கஞ்சிகோணம்பாளையம் மற்றும் நல்லிகவுண்டம்பாளையம் ஆகிய 4 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் துவக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் தெருநாய்கள் இம்மையத்திற்கு கொண்டுவரப்படும். பின்னர், நாய்களுக்கு பயிற்சி பெற்ற டாக்டர்கள் மூலமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த மையத்திற்காக விலங்குகள் நலவாரியம் மூலமாக நவீன கருவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் முதலில் நாய்களுக்கு ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். 20 நிமிடங்களில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முடிக்கப்படும். மேலும், தற்போது நாய்களை பிடிக்க ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதையடுத்து, தெருநாய்களை பிடிக்க ஆர்வமுள்ள தன்னார்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக வரும் 24ம்தேதி நல்லிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த 5 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு தேனியில் ஒரு வார காலம் பயிற்சி அளிக்கப்படும். இவர்களை தொடந்து மற்ற பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த 4 மையங்களின் மூலம் தற்போது வரை 20க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
