*61 ஏக்கர் பரப்பளவில் மலர் தோட்டங்கள்
திருமலை : கலியுக வைகுண்டமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலர் கைங்கர்யம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏழுமலையான் கோயிலுக்கு மலர் கைங்கர்யங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன.
முக்கியமான நித்ய, வாராந்திர, மாதாந்திர, முக்கிய உற்சவ நாட்களில் தடையில்லாமல் பூக்களை வழங்கும் பணியில் தேவஸ்தானத்தின் முதுகெலும்பாக தேவஸ்தான தோட்டக்கலைத் துறை உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தோட்டக்கலைத் துறை 1991 முதல் திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தோட்டங்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிலும், ஏழுமலையான் கோயிலுக்குத் தேவையான பூக்களை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
திருமலை மற்றும் திருப்பதியில் மொத்தம் 61 ஏக்கர் பரப்பளவில் தேவஸ்தானத்தின் மலர் தோட்டங்கள் உள்ளது. இதில், 54 ஏக்கர் அலங்காரத் தோட்டங்களாகவும், மீதமுள்ள 7 ஏக்கர் மலர் தோட்டங்களாகவும் பக்தி மற்றும் இயற்கை அழகின் கலவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் 450க்கும் மேற்பட்ட உற்சவத்தில் பூக்களின் தேவை மிகப்பெரியது. ஏழுமலையான் கோயில் மற்றும் துணை கோயில்களுக்கு ஆண்டுக்கு சுமார் 2.60 லட்சம் முதல் 2.70 லட்சம் கிலோ பூக்கள் தேவைப்படும். அதே நேரத்தில் தினசரி பூஜைகளுக்கு சராசரியாக 300 கிலோ பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
திருப்பதியில் உள்ள கோயில்கள் மற்றும் வெளிப்புற கோயில்களின் தேவைகளுக்கு மேலதிகமாக, ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் கிலோ பூக்கள் வழங்கப்படுகின்றன. இந்த சூழலில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பூக்களை வாங்குவதற்கும், புஷ்ப கைங்கர்யத்தில் அவ்வப்போது பூக்களை பெறுவதற்கு தோட்டக்கலைத் துறை சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பாங்காக், மலேசியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தரமான பூக்களை சேகரித்து சுவாமிக்கு கைங்கர்யத்திற்கு பூக்களை தோட்டக்கலைத் துறை சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு அலங்கரிக்கப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் சுவாமியின் பிறந்த நட்சத்திரமான ஸ்ரவண நட்சத்திர நாளில் நடைபெறும் புஷ்பயாக மஹோத்சவத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 16 முதல் 18 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகள் என 10 டன் மலர்கள் சேகரிக்கப்பட்டு புஷ்ப யாகம் செய்வதில் தோட்டக்கலைத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூன்று வழிகளில் பூக்களை கொள்முதல் செய்கிறது. தேவஸ்தானம் அதன் சொந்த மலர் தோட்டங்கள், பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட விவசாய சங்கங்கள் மூலம் பூக்களை பெறுகிறது.
இதேபோல், திருமலை மற்றும் திருப்பதியைச் சுற்றியுள்ள அலங்காரத் தோட்டங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பராமரிப்பதில் நன்கொடையாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நன்கொடையாளர்களின் உதவியுடன் மொத்தம் 20 பகுதிகளில் தோட்டங்கள் பராமரிக்கப்படும். அதே நேரத்தில், தோட்டக்கலைத் துறை மேலும் 16 பகுதிகளை நேரடியாக நிர்வகித்து வருகிறது.
இதில் திருமலையில் கீதோபதேசம் பூங்கா, நாமலா பூங்கா, கருட சந்திப்பு, லேபாக்ஷி சந்திப்பு மற்றும் புஷ்ப தோட்டத்துறை போன்ற பகுதிகள் பக்தர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஸ்ரீனிவாசலு தலைமையில், தோட்டக்கலைத் துறை தோட்டங்களின் இயற்கை அழகைப் பாதுகாப்பதோடு, பக்தர்களுக்கு இனிமையான அனுபவத்தை வழங்குவதன் முன்மாதிரியாக விளங்குகிறது.
