‘என்னைய யாருமே கண்டுக்கல…’

புதிய தமிழகம் கட்சி தலைவராக உள்ள கிருஷ்ணசாமி கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 2001 மற்றும் 2006 சட்டப்பேரவை தேர்தல்களில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக சட்டப்பேரவைக்கு அவர் தேர்வானார்.

மீண்டும் அதே தொகுதியில் 2016, 2021 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதேபோல தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கிருஷ்ணசாமி, அதிமுக நிர்வாகிகள் தனது வெற்றிக்காக பாடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அக்கூட்டணியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக தலைமையிலான மூன்றாவது அணி அமைந்தால், அக்கூட்டணிக்கு செல்லலாம் என கிருஷ்ணசாமி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.  ஆனால் தவெகவை நம்பி வேறு எந்த கட்சியும் கூட்டணி இணையாததாலும், விஜயின் அரசியல் செயல்பாடுகளில் போதிய திருப்தியின்மை இருப்பதாலும் அக்கூட்டணியில் இணைய அவர் தயக்கம் காட்டி வருகிறார்.

அதேபோல தவெக தரப்பிலும் இவரை இணைத்து கொள்வதில் பெரிய ஆர்வம் காட்டவில்லையாம். இதனை வெளிக்காட்டி கொள்ளாமல், தவெக கூட்டணிக்கு சென்று விடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கினால், டிடிவி. தினகரனை பாஜ தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்தது போல தன்னையும் இணைக்கும் எனவும், அப்போது ராஜ்யசபா சீட் உள்ளிட்ட டிமெண்ட்களை வைக்கலாம் எனவும் நினைத்தாராம். ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக பாஜவும் கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டததால் கிருஷ்ணசாமி அதிருப்தியில் உள்ளாராம்.

தவெக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இருவரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கான முக்கியத்துவம் அளிக்காததால், எந்த கட்சியுடன் சேர்வது என முடிவு எடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறாராம். இதனால் நீண்ட யோசனைக்கு பிறகு, தனது நிலைப்பாட்டில் இறங்கி வந்து எந்த நிபந்தனையும் இன்றி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தயார் என இரண்டு தரப்பிற்கும் தூது அனுப்பியுள்ளாராம். அதை ஏற்று கூட்டணிக்கு அழைக்கும் கட்சியுடன் கூட்டணி சேர கிருஷ்ணசாமி தயாராக காத்திருக்கிறாராம்.

Related Stories: