மாஜிக்காக காலில் விழுந்து மகள் பிரசாரம்

அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மூன்றாவது முறையாக திருமங்கலம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நோக்கத்தில் பிளாஸ்டிக் வாளி, வேட்டி, சேலை, கரும்பு என பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்து வருகிறார். தனது தந்தைக்கு ஆதரவாக அவரது மூத்த மகள் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உதயகுமார் சட்டபேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 4 நாட்களுக்கு முன்பே சென்னைக்கு சென்று விட்டார். தனது தந்தைக்காக பிரசார பணிகளை மேற்கொள்ளும் வகையில் அவரது மூத்த மகள் பிரியதர்சினி திருமங்கலம் தொகுதியில் வலம் வரத்துவங்கியுள்ளார்.

அதிமுக மகளிரணியினருடன் இணைந்து கிராமந்தோறும் செல்லும் பிரியதர்சினி அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களுடன் சென்று பொதுமக்களிடம் கொடுத்தும், வயதான மூதாட்டிகளைப் பார்த்தால் காலில் விழுவது, குழந்தைகளை கன்னத்தில் கிள்ளி கொஞ்சுவது என ஆதரவு கேட்டு வருகிறார். உதயகுமார் ஊரில் இல்லாத நேரத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என நினைத்திருந்த அதிமுக நிர்வாகிகள், உதயகுமாரின் மகளால் ஓய்வெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: