சென்னை: பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, நிலை கொண்டுள்ளது. அதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்துள்ளது. இன்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நாளையும் மேற்கண்ட இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 22ம் தேதி திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும், இன்றும் நாளையும் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும்.
