புதிய டிஜிபி யார்? பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது தமிழக அரசு: விரைவில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்பட வாய்ப்பு

சென்னை: புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியலை ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. விரைவில் டெல்லியில் ஒன்றிய அரசு அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு புதிய டிஜிபி நியமிக்கப்படுவார் என்று தமிழக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார். இதனால் புதிய டிஜிபியை நியமிக்கும் பணியை சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே தமிழக அரசு தொடங்கியது. தமிழகத்தில் டிஜிபியாக நியமிக்கப்பட தகுதி உள்ளவர்களின் பட்டியல் என்று சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே, டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் ஒன்றிய உள்துறைச் செயலாளர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், அப்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராஜீவ்குமார் ஆகியோர் சட்டம் -ஒழுங்கு பணியில் நீண்ட நாட்கள் வேலை செய்யவில்லை. சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், சீமா அகர்வால், மகேஷ்குமர் அகர்வால், வெங்கட்ராமன் ஆகியோரை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்புங்கள். நாங்கள் அந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்கிறோம் என்று கூறினார். ஆனால் ஒன்றிய அரசோ, சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதை தமிழக அரசு ஏற்கவில்லை. ஒன்றிய அரசின் விதிமுறைகளுக்கு மாறாகவே இந்த பரிந்துரை உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், டிஜிபி நியமனம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி குறித்தும் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒரு வாரத்தில் தமிழக அரசு பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து புதிய பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்தன. அதில் சீமா அகர்வால் வருகிற மே மாதம் ஓய்வு பெறுகிறார். டிஜிபியாக நியமிக்கப்படுகிறவர் குறைந்தது 6 மாதமாவது பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், சீமா அகர்வாலுக்கு 3 மாதமே உள்ளதால், அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே, டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சங்கர், அமல்ராஜ் ஆகியோர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒன்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் ஒவ்வொரு அதிகாரி குறித்தும் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ராஜீவ்குமார் நீண்ட நாட்கள் சட்டம் -ஒழுங்கு பணியில் ஈடுபடவில்லை. சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால் அவர்களை தவிர மற்றவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், இந்த மாத கடைசியில் ஒன்றிய அரசு புதிய டிஜிபி நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும். இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், தற்போதைய டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அப்போது புதிய டிஜிபி நியமனம் குறித்து முடிவு எடுக்கப்பட்டு 3 பேர் கொண்ட பட்டியல் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: