23 உறுப்பினர்கள் பதவிக்கு கடும் போட்டி மார்ச் 30ல் பார்கவுன்சில் தேர்தல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து வரும் மார்ச் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளளது. இந்த தேர்தலை நடத்த இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் சக்தர் தலைமையில் தேர்தல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நியமன உறுப்பினர்கள் தவிர 23 உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இத்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், உறுப்பினர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகனகிருஷ்ணன், டி.செல்வம், தாழமுத்தரசன், வேல் கார்த்திகேயன், எம்.வேல்முருகன், கே.பாலு, அய்யப்பமணி, பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்டோர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த முறை சுமார் 120 பேர் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலில் 200 பேருக்கும்மேல் போட்டியிட போவதாக தெரிகிறது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகளான வழக்கறி ஞர்கள் விஜயராஜ், சாம் ஆர்தர் உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள். பெண்களுக்கான 5 இடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் டி.பிரசன்னா, வி.நளினி, மார்க்ரெட், சாந்தகுமாரி, வி.சி.க சார்பில் வழக்கறிஞர் எல்.சுமதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுமார் 50 பெண் வழக்கறிஞர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம்பேர் வரை வாக்களிக்கவுள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

Related Stories: