சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று ரமலான் நோன்பு தொடங்கியது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கருதப்படுகிறது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள். ரமலான் மாதத்தில் தான் நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது என அவர்கள் நம்புகின்றனர். இந்த புனித மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இப்தார்) வரை முஸ்லிம்கள் எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் கடும் நோன்பிருப்பார்கள். இதையடுத்து கடைசி நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பிறை தெரிந்ததை தொடர்ந்து தமிழத்தில் பிப்ரவரி 19ம் தேதி (நேற்று) முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி என்.பி.உஸ்மான் முஹியித்தின் அறிவித்து இருந்தார். இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையக தலைமை காஜி தாவுத் கைசரும் அறிவித்து இருந்தார்.அந்த வகையில் ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கியது. இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
இதுகுறித்து இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டி: இஸ்லாமியர்களின் புனிதமான மாதம் இது. ரமலான் நோன்பு தொடங்கியிருக்கும் இந்த வேளையில் அனைவரும் நோன்பிருந்து இறைவனை வழிபடுவோம். சாந்தியும், சமாதானமும் கொண்டு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வோம். இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருப்பதை கொடுத்து, ஜகாத் செய்து மற்றும் அவர்களின் பசியாற்ற வேண்டியது நம் கடமை. அந்த கடமையை தவறாமல் செய்வோம். இதுவரை ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தவர்களும் கூட அன்பை பரிமாறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். இறைவனை நினைத்து தொழுது அதன் மூலம் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கான எல்லாம் வல்ல அல்லா அருள் புரியட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
