பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் தலைவர் அன்புமணிக்கும், கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்து தனது முகவரிக்கு கடிதம் அனுப்புமாறு உத்தரவிடக் கோரி, கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக அன்புமணி போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

கட்சி நிறுவனர் என்ற முறையில் எனது அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுவில், தேர்தல் ஆணையத்தின் சூழ்ச்சியால் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பாமக தலைவர் நான் மட்டுமே என்பதை பதிவு செய்யும் வரை தமிழகம் மற்றும் புதுவை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: