சென்னை: சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரையில் இன்று நடந்த கேள்வி நேரத்தின் போது, விருகம்பாக்கம் பிரபாகர் ராஜா(திமுக) பேசுகையில், விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படாமல் இருக்கிறது. நவீன காலத்திற்கு ஏற்ப அவற்றை மாற்றி தர வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘வடசென்னை வளர்ச்சி திட்டம் மூலம் வடசென்னையின் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. விருகம்பாக்கம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாற்றி வருகிறோம். எந்த பகுதியில் மாற்ற வேண்டும் என குறிப்பிட்டு சொன்னால் அதனையும் செய்ய அரசு தயாராக உள்ளது’’ என்று பதில் அளித்தார்.
