லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு

சென்னை : லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. லாரி உரிமையாளர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தகுதிச் சான்றிதழ்(FC) பெறுவதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் லாரி, வேன் மற்றும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) புதுப்பிக்கும் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்த ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த திடீர் கட்டண உயர்வு போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு லாரி உரிமையாளர் சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

டீசல் விலை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு, இந்த தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வும் சேர்ந்தால் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கும் என அவர்கள் முறையிட்டனர்.

இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்துத் துறை, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பழைய கட்டண முறையிலேயே வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ள தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசம் லாரி உரிமையாளர்களுக்கு ஓரளவிற்கு நிம்மதியை அளித்துள்ளதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் அவர்களுக்கு வழிவகை செய்துள்ளது.

Related Stories: