சென்னை: கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நாளான இன்று தொடங்கியது. சாம்பல் புதன் என்பது கிறிஸ்தவர்களின் முக்கியமான புனித நாட்களில் ஒன்றாகும். சாம்பல் புதன் நிகழ்வு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு 46 நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. சாம்பல் புதன்கிழமை முதல் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிக்கிறார்கள். அந்த நோன்பு நிகழ்வை தொடங்கி வைக்கும் வகையில் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிடப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டு திருச்சபையின் அறிவிப்புகள் சாம்பலை நெற்றியில் பூசுவதை தவத்தின் அடையாளமாகக் குறிப்பிடுகின்றன. சாம்பல் என்பது கடவுள் நம்மை உருவாக்கிய துரும்பையும், துக்கத்தையும் குறிக்கிறது. ஏசு கிறிஸ்து பாவிகளுக்காக சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் வனாந்திரத்தில் தவம் இருந்ததை அனுசரிக்கும் வகையில் சாம்பல் புதன் முதல் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி நாள் வரை நோன்பு அனுசரிக்கப்படும்.
இந்த சாம்பல் புதன் நிகழ்வு இன்று உலகம் முழுவதும் தொடங்கியது. கிறிஸ்தவர்கள் காலை முதல் இன்று முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்து தவக்காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் சாம்பலை சிலுவை குறியாக நெற்றியில் இட்டுக்கொள்வார்கள். தமிழகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களிலும் இன்று சாம்பல் புதன் நிகழ்வு திருப்பலி, ஆராதனைகளுடன் தொடங்கியது. சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர், புனித தோமையார் மலை, பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை 6 மணி முதல் திருப்பலிகளும், ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தவக்காலத்தில் பெரும்பாலும் புலால் உணவை கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
