* லா லிகா கால்பந்து பார்சிலோனா தோல்வி
மாட்ரிட்: லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த பார்சிலோனா – கிரோனா அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 59வது நிமிடத்தில் பார்சிலோனாவின் பா குபார்சி முதல் கோல் போட்டார். அதற்கு பதிலடியாக கிரோனா அணியின் தாமஸ் லெமர் 62வது நிமிடத்திலும் பிரான் பெல்ட்ரான் 86வது நிமிடத்திலும் இரு கோல்கள் போட்டு அசத்தினர். அதன் பின் கோல்கள் விழாததால், 2-1 என்ற கோல் கணக்கில் கிரோனா அபார வெற்றி பெற்றது.
* செமிபைனலில் இந்திய மகளிர்
பாங்காக்: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பாங்காக் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் நேபாளம் மகளிர் அணியுடன் இந்தியா ஏ மகளிர் அணி மோதியது. முதலில் களமிறங்கிய நேபாளம் அணியை, 78 ரன்னுக்குள் இந்தியா சுருட்டியது. இடதுகை சுழல் பந்து வீச்சாளர் தனுஜா கன்வர் 12 ரன் தந்து 4 விக்கெட் சாய்த்தார். அதன் பின்னர் ஆடிய இந்தியா, 7.5 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 82 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தினேஷ் விருந்தா 18 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியால் இந்தியா செமிபைனலுக்குள் நுழைந்தது.
* எப்ஐஎச் புரோ ஹாக்கி ஹர்திக் சிங் கேப்டன்
புதுடெல்லி: எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி போட்டிகள், வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஹோபார்ட் நகரில் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீரர் ஹர்திக் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹோபார்ட் நகரில் நடக்கும் போட்டிகளில், ஸ்பெயின், ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது.
