புதுடெல்லி: கடந்த 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கு தான் சொந்தம் என்று சரிகம நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, உலகளாவிய மற்றும் நிரந்தரமான காப்புரிமையைத் நாங்கள் தான் பெற்றுள்ளோம்.
ஆனால், இளையராஜா தனது சொந்தப் பாடல்கள் எனக்கூறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவ்ன் ஆகிய டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றி உள்ளார். இது சட்டவிரோதம் ஆகும். குறிப்பாக 1957 காப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்தத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் ஆவார் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் சரிகம நிறுவனத்தின் வாதத்தில் ஏற்பதால் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதில் இளையராஜா அல்லது அவர் சார்ந்த பிரதிநிதிகள், சரிகம வசம் உள்ள அந்த 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமைக் கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது. இந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் சரிகம நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் ’’ என்று நீதிபதி தெரிவித்தார்.
