புதுடெல்லி: இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 46லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத உள்ளனர். 10ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 10ம் தேதி முடிவடைகின்றன. இதேபோல் 12ம் வகுப்பு தேர்வுகளும் இன்று தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகின்றது. இந்நிலையில் கடந்த காலங்களில் நிகழ்ந்தது போல சில நேர்மையற்ற கூறுகள் தேர்வுகளின்போது பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி செய்திகளைப் பரப்புவதன் மூலமாக மாணவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக சிபிஎஸ்இ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
10மற்றும் 12ம் வகுப்பு வினாத்தாள் கசிவு மற்றும் புழக்கத்தில் விடப்படுவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. மாணவர்கள் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இது குறித்து விழிப்புடன் இருக்கவும் சரிபார்க்கப்படாத செய்திகள் மற்றும் போலி செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதுபோன்ற ஆதாரமற்ற உள்ளடக்கத்தை நம்புவது, அதில் ஈடுபடுவது அல்லது பகிர்வது தேவையற்ற பதற்றம் மற்றும் குழப்பத்தை உருவாக்கக்கூடும். மாணவர்களின் தயார்நிலையையும் பாதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
