கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது சுமார் 1.63 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு, தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அதிகப்படியான பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக பருய்பூர் கிழக்கு மற்றும் மொய்னா தொகுதிகளைச் சேர்ந்த 7 தேர்தல் அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் வாக்காளர் பட்டியலை புதுப்பித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கு உதவுவதற்காக பணிபுரிந்த மாநில அரசு ஊழியர்கள். இந்த அதிகாரிகள் மீது அந்தந்த கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்றும் இது குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் மாநில தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
