தமிழ்நாடு அரசு தரும் விருதுகள் தாயின் முத்தத்திற்கு சமமானது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கலைஞர் கூறியது போல் நேஷனல் விருது, இன்டர்நேஷனல் விருது நிச்சயமாக கிடைக்கும். ஆனால் எந்த விருதும் தாயினுடைய முத்தத்திற்கு ஈடாகாது. அது மாதிரி தான், தமிழ்நாடு அரசு கொடுக்கின்ற விருதுகள் அனைத்தும் உங்களுடைய தாயினுடைய முத்தத்திற்கு சமமானது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு இந்தியாவிலேயே மிகவும் Vibrant ஆன Industry என்றால் தமிழ் பிலிம் இன்டஸ்ட்ரீ என்று சொன்னால் அது மிகை ஆகாது. வருடா, வருடம் ஒவ்வொரு ஜானர்லயும் முக்கியமான படங்களை நம்முடைய தமிழ் திரையுலகம் இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்று 2015 முதல் 2022 வரையிலான கல்வி ஆண்டிற்கான, தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் கொடுக்கப்பட இருக்கிறது. பிலிம் இன்ஸ்ட்ரீ தமிழ்நாட்டினுடைய தமிழ் சினிமாவுக்கு புதுமையான இயக்குநர்களை, கலைஞர்களை, தொழில் நுட்ப கலைஞர்களை தருகின்ற ஒரு நிறுவனம். அந்த வகையில், திரைப்படக் கல்லூரியில் படித்து விருது பெறுகின்ற எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களுக்கும் பாராட்டுகள்.

திரைத்துறையினுடைய வளர்ச்சிக்கும், திரைக்கலைஞர்களின் முன்னேற்றத்துக்கும் திமுக அரசு என்றைக்கும் துணை நிற்கும். குறிப்பாக, கடந்த 5 வருடத்தில் மட்டும், திமுக அரசு 805 உறுப்பினர்களுக்கு சுமார் 47 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை, விபத்து காப்பீடு, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என்று ஏராளமான நலத்திட்டங்களை கொடுத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவும், உலக திரைப்படங்களை, தமிழ் ஆடியன்ஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கவும், அரசு உங்களுக்கு துணையாக இருக்கிறது.

கடந்த 4 வருடத்தில் மட்டும், International Film Festival நடத்த சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம் முதல்வர் மானியமாக தந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தமிழ்த்திரையுலகின் மூத்த கலைஞர்களை கவுரவிக்கின்ற வகையில், கலைஞர் பெயரில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும் வருடா, வருடம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி கலை உலகினருக்கு கழக அரசு என்றைக்குமே உற்ற துணையாக இருந்து வருகிறது. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விசயத்தை சொல்லி நிறைவு செய்ய விரும்புகின்றேன். 2009ம் ஆண்டில் கலைமாமணி விருதுகள் வழங்குகிற நிகழ்ச்சியில் கலைஞர், வாழ்த்தி பேசும்போது குறிப்பிட்டு சொன்னார், “கலைஞர்களாகிய உங்களுக்கு எவ்வளவோ விருதுகள் கிடைக்கும். நேஷனல் விருது கிடைக்கும், இன்டர்நேஷனல் விருது நிச்சயமாக கிடைக்கும். ஆனால், எந்த விருதும் தாயினுடைய முத்தத்திற்கு ஈடாகாது.

அது மாதிரி தான், தமிழ்நாடு அரசு கொடுக்கின்ற விருதுகளும். இந்த விருதுகள் அனைத்தும் உங்களுடைய தாயினுடைய முத்தத்திற்கு சமமானது” என்று பேசினார். அப்படிப்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், திரைப்பட இயக்குநர் அமிர்தம் உள்பட திரைத்துரையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: