சென்னை: தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான தேர்தல் இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேசிய அளவில் 1,444 அதிகாரிகள், 714 பொது பார்வையாளர்கள், 233 காவல் பார்வையாளர்கள், 497 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர்கள் மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் சஞ்சய் குமார், பானு பிரகாஷ் யெத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நியமித்துள்ளார்.
அதன்படி, இந்த குழுவினர் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மூன்று நாட்களுக்கு முன் சென்னை வந்தனர்.
பின்னர் புதுச்சேரி சென்று அங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள், மத்திய-மாநில அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை மீண்டும் சென்னை வந்த துணை தேர்தல் ஆணைய குழுவினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், மத்திய அரசு துறைகளான வருமான வரித்துறை, சுங்கத்துறை, ரயில்வே, சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவப் படைப்பிரிவுகள், அஞ்சல் துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர்.
இதை தொடர்ந்து, நேற்று காலை 9 மணிக்கு சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் (எஸ்பிக்கள்) தேர்தல் தயார் நிலை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். இதில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய தொகுதிகள், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தலை அசம்பாவிதங்கள் இன்றி, அமைதியாக நடத்த எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வருகிற 17ம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் மற்ற துறையினருடன் தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்த அந்தந்த துறைகளின் பங்களிப்பு வழங்குதல், அதற்கு தேவையான அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்குதல், செலவினங்களை கண்காணிக்க வருமான வரித்துறையின் தயார்நிலை, தேர்தல் பணியாளர்களுக்கு இணைய வழியில் வாக்குச்சாவடி பணி ஒதுக்குவது, தயார் நிலையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட தேவையான துணை ராணுவப்படை கம்பெனிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய துணை தேர்தல் ஆணையர்கள், இந்த தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்தவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை தடுக்கவும் ஒத்துழைப்பு அளிக்குமாறு பல்வேறு துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். இரண்டு நாள் ஆலோசனையை முடித்துக்கொண்டு இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் குழுவினர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.
