முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க திரண்ட பெண்கள்: அண்ணா அறிவாலயத்தில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை: ரூ.5 ஆயிரம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெண்களும், திமுக மகளிரணியினரும் நேற்று காலை முதலே திரண்டனர். அவர்கள் அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் திமுக மகளிர் அணியினர் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா அறிவாலய வளாகத்தில் ஏராளமான பெண்கள், மகளிரணியினர் திரண்டு இருப்பதை பார்த்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் மகிழ்ச்சியில் திளைத்தார். உடனடியாக காரில் இருந்து இறங்கிய அவருக்கு பெண்களும், மகளிரணியினரும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக நன்றி கூறினர். ஆரவாரத்துடன் வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினர். சில பெண்கள் கையில் ரூ.5 ஆயிரம் பணத்தை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ரூ.5 ஆயிரம் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வந்த பெண்கள் கைகளில் வைத்திருந்த பதாதைகளில், ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’, ‘நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் ஆக தருவேன்- தலைவர் எம்.கே.எஸ்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஏராளமான பெண்கள் திரண்டதால் அண்ணா அறிவாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

Related Stories: