* தேர்தலுக்கு பின் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு
* ரூ.6,000 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து எடுத்த பெண்கள் மகிழ்ச்சி
சென்னை: மகளிர் உரிமை தொகை பெறும் 1.31 கோடி பெண்களுக்கு மூன்று மாதத்துக்கான ரூ.3000 மற்றும் கோடைகால் தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 நேற்று அனைவரின் வங்கி கணக்கில் செலுத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார். மேலும், அடுத்த ஆட்சி காலத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். மிக முக்கியமான ஒரு பொருண்மை குறித்து இந்த காணொலி வெளியிடப்படுகிறது. நமது அரசின் சார்பாக ரூ.5 ஆயிரம் உங்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகை எதற்காக வழங்கப்படுகிறது? நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தது. அதனை சமாளித்து மக்களின் உயிரை காத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.4 ஆயிரம் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது. முந்தைய ஆட்சி விட்டுச்சென்ற கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஆட்சிக்கு வந்ததுமே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம்.
நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன்; அப்போது இது சாத்தியமற்றது என்று சிலர் கூறினர். இருப்பினும் நிதி நெருக்கடியை சமாளித்து, ஒன்றிய அரசின் பாரபட்சத்தையும் மீறி, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம். தொடக்கத்தில் ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்கு பயனளித்த இத்திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல; சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் உரிமைத் தொகையாகும். இத்தொகையைக் கொண்டு அன்றாட இல்லச் செலவுகள், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் என பல அத்தியாவசிய தேவைகளை மகளிரே நிறைவு செய்ய இத்திட்டம் வழிவகுத்தது. அதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி, அனைத்து குடும்ப தலைவிகளும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக அமைந்துள்ளது. இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
நாம் இந்த உரிமை தொகையை மேம்படுத்த முனைந்து வரும் வேளையில், அதற்கு எதிராக டெல்லியில் உள்ள ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிபணிந்து நடக்கும் மற்றொரு கூட்டமும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமை தொகையை நிறுத்த சூழ்ச்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சிலர் முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்த திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்தால் நீங்கள் எத்தகைய சிரமங்களுக்கு உள்ளாவீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் நன்கு அறிவேன்.
கடுமையான வெயிலில் பணிக்கு செல்ல இயலாத கோடை காலத்தில் இப்பணம் நிறுத்தப்பட்டால் உங்களுக்கு ஏற்படும் இடரை என்னால் உணர முடிகிறது. உங்கள் மாதாந்திரச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பீர்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கவோ அல்லது குழந்தைகளின் தேர்வுக் காலங்களில் அவர்களுக்கான கல்விச் செலவுகளை செய்யவோ இயலுமா. இக்கஷ்டங்களை எல்லாம் கருத்தில் கொண்டே ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்.
அதன்படி, இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கான (மார்ச், ஏப்ரல்) உரிமைத்தொகை தவணைகளை சேர்த்து ரூ.3 ஆயிரமும், கூடுதலாக கோடைகால செலவுகளுக்காக ரூ.2 ஆயிரம் சிறப்பு தொகையும் சேர்த்து, மொத்தம் ரூ.5 ஆயிரம் சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த தருணத்தில் மற்றுமொரு வேண்டுகோள்… இந்த ரூ.5 ஆயிரமும் அடுத்த
மூன்று மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் கவனமாகச் செலவிடுங்கள், இயன்றவரை சேமிக்கவும் முயலுங்கள்.
அன்புச் சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமையவிருப்பதும் திராவிட மாடல் ஆட்சிதான். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில் உங்களுடைய உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழங்கும் வாக்குறுதி இது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு அடையாத பொருளாதார வளர்ச்சியை இந்தியாவே வியக்கும் வகையில் நாம் சாதித்துக் காட்டியுள்ளோம். எனவே எந்தத் தடை வந்தாலும் அவற்றைக் கடந்து தமிழ்நாடாக ஒன்றிணைந்து வெல்வோம்.முதல்வர் அறிவிப்பின்படி 1.31 கோடி வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட ரூ.6550 கோடியில், ரூ. 6 ஆயிரம் கோடியை பெண்கள் ஒரே நாளில் எடுத்தனர்.
* ரூ.6 ஆயிரம் கோடி எடுத்த மக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் திடீரென 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கிற்கு தலா ரூ.5 ஆயிரம் செலுத்தினார். இதனால் நேற்று வங்கியில் மட்டும் தமிழக அரசு மூலம் ரூ.6550 கோடி செலுத்தப்பட்டது. இந்த தகவல் காலையில் வெளியானதும் வங்கிகளில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை மக்கள் தங்கள் பணத்தை செலவுக்காக எடுத்திருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் தங்கள் கஷ்டங்களைப் போக்க இந்த பணம் பெரிய அளவில் உதவியாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய அளவில் பணம் வந்ததும், வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துள்ளனர். பல ஏடிஎம்களில் பணம் காலியாகியுள்ளன. மீண்டும் பணம் நிரப்பப்பட்ட பிறகு பணத்தை மகளிர் எடுத்துச் சென்றுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
* ‘யார் தடை ஏற்படுத்தினாலும் பின்வாங்க மாட்டேன்’
மகளிர் உரிமை தொகை உயர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலை காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்தி கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று (நேற்று) காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
* இன்று, குட் மார்னிங் மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு இது ஒரு சூப்பர் மார்னிங்
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர். மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘இன்று, குட் மார்னிங் மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு இது ஒரு சூப்பர் மார்னிங்-ஆக அமைந்திருக்கிறது. பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடித்து, இன்றைக்கு காலையில், 1 கோடியே 31 லட்சம் சகோதரிகளுக்கு சிறப்பு தொகுப்பாக 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கிவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். நீங்களும் வாழ்க்கையில் பல தடைகளை கடந்து, தேர்வில் வெற்றி பெற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். இன்று மகிழ்ச்சியோடு பொறுப்புணர்வும் எனக்கு கூடுதல் ஆகியிருக்கிறது. பதவி ஏற்றபோது சொன்னேன் – வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என நினைக்காமல், அனைவருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்று சொன்னேன். அனைவருக்குமான முதலமைச்சராக தான் இந்த 5 ஆண்டுகள் இருந்தேன்.
இனியும், அனைவரையும், அனைத்து வகையிலும் உயர்த்தக்கூடிய முதலமைச்சராக, தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர்-1 ஸ்டேட்டாக உயர்த்தக்கூடிய எண்ணத்தோடு, அந்த பொறுப்புணர்வு எனக்கு கூடியிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற எனக்கு நீங்கள்தான் பக்கபலமாக இருக்கப் போகிறீர்கள். நம்முடைய நிர்வாகம் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களை பெருக்க வேண்டும்; பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கவேண்டும்; அடுத்த தலைமுறையை கைதூக்கி விடவேண்டும். அதற்கான மன உறுதியை நெஞ்சில் ஏந்தியபடி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். நீங்களும் வாழ்க்கையில் பல தடைகளை கடந்து, தேர்வில் வெற்றி பெற்று, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்களும் அப்படித்தான் பீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
