சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மத, இன உள்ளிட்ட ரீதியான பாகுபாட்டை தடுக்க யுஜிசி கடந்த ஜனவரி மாதம் சமவாய்ப்பு ஊக்குவிப்பு விதிமுறைகள் 2026 கொண்டு வந்தது. இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவினருக்கு எதிராக இருப்பதாகவும், பொய் புகார்களுக்கான வழிமுறைகள், பாகுபாடு என வரையறுக்கப்படுபவை எவை என இல்லை எனவும் கூறி பொதுப்பிரிவு மாணவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யுஜிசி விதிமுறைகளுக்கு தெளிவாக இல்லை என கருத்து தெரிவித்து இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. விசாரணை காலத்தில் 2012ம் ஆண்டுக்கான யுஜிசி விதிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளை தடுப்பதற்காக, முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் யுஜிசி கொண்டு வந்த விதிமுறைகளுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிதித்து மாணவர் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது. இதனை முறையாகக் கையாளாமல் மறைமுகமாக இத்தடைக்கு காரணமாக இருந்த ஒன்றிய அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்றம் தடையை நீக்கக்கோரியும் மாணவர்கள் அமைப்பு சென்னையில் பிப்ரவரி 13ம் தேதி பேரணியும், ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தது. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள சுவாமி சிவானந்தா சாலையில் நேற்று மாலை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
