பல்வேறு குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்தான விவகாரம் 5 அலுவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்: துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை; டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

சென்னை: பல்வேறு குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்தான விவகாரத்தில் 5 அலுவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) கடந்த 8ம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு தமிழ்த்தகுதித் தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது.

காலையில் நடைபெற இருந்த தேர்வை 9233 பேரும், பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வை 9244 பேரும் எழுத இருந்தனர். தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்தது. மற்றொரு தேதியில் அந்த தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

அன்று காலை குரூப்-2ஏ பாடங்களுக்கான தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற 28ம் தேதிக்குள் அதுசார்ந்த அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் ஓ.டி.ஆர். எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பான தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி, குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். வருகிற 22ம் தேதி நடைபெற இருந்த குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 8ம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏவில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. இத்தேர்வுகள் எதிர் வரும் மார்ச் 15ம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வுக்கான விவரங்கள் குறித்து தேர்வாணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி அன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இரண்டு உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும். துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாவண்ணம் கூடுதலான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: