சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்மூலம் 5 ஆண்டுகளில் 1,55,131 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 வெற்றியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: உங்கள் கையில் இருக்கின்ற பணி நியமன ஆணை என்பது, உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, உங்களின் எதிர்காலத்திற்கான உத்தரவாதம். இளைஞர்களான நீங்கள்தான் தமிழ்நாட்டின் பலம். நீங்கள் முன்னேறும்போதுதான், தமிழ்நாடும், இந்திய நாடும் முன்னேறுகிறது. இதுவரைக்கும் நீங்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை, இனி உங்கள் பணிகள் மூலமாக, இந்த சமூகத்தில் விதைக்கப் போகிறீர்கள். கோடிக்கணக்கான மக்கள், தங்களின் பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்கு உங்களை நம்பித்தான் வருவார்கள். நீங்கள்தான் நம்முடைய அரசின் முகங்களாக செயல்படப் போகிறீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால்தான், அரசு நிர்வாகம் தடையில்லாமல் செயல்படும். உங்களைத் தேடி வருகின்ற மக்களுடைய நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 45,126 பேர் இதுவரை வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 24,927 பேர் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 12,894 பேர் சேர்ந்திருக்கிறார்கள். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 11,244 பேர் சேர்ந்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், பணியின்போது இயற்கை எய்தும் அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டத்தின்கீழ் 5,899 பேர் சேர்ந்திருக்கிறார்கள். பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54,864 பேர் சேர்ந்திருக்கிறார்கள். விளையாட்டு இடஒதுக்கீட்டில், 177 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது. இந்த 5 ஆண்டு காலத்தில், மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 131 இளைஞர்களுக்கு பணி நியமனத்தை வழங்கியிருக்கிறோம்.
இதையெல்லாம், அரசு துறைகளில் செய்தது என்றால், பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணங்கள் மூலமாக, தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கின்ற தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக, கிட்டத்தட்ட 38 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம். இளைஞர்களுக்காக, வளமான தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மூலமாக உங்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் கடமையை மனசாட்சியுடன் செய்யுங்கள். நீங்கள் நேர்மையாக இருந்தால், அது அரசின் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
