*குவியும் பாராட்டு
தஞ்சாவூர் : பாம்பு கடித்த சிறுமியை டூவீலரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய தஞ்சை போக்குவரத்து காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளான நேற்றுமுன்தினம் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தஞ்சாவூர் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த கவிதா, தனது 2 மகள்களுடன் பெரிய கோயிலுக்கு வந்தார். கோயில் வளாகத்தில் உள்ள புல்தரையில் சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தபோது கவிதாவின் இரண்டாவது மகள் நித்யஸ்ரீயை(9) பாம்பு கடித்ததால் தாய் கதறினார்.
இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. உடனே அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராஜகண்ணன், தனது டூவீலரில் சிறுமியை அழைத்து சென்று அருகில் உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தார். சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமுடன் உள்ளார். சரியான நேரத்தில் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் சிறுமியின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர் ராஜகண்ணனை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து எஸ்.பி.ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.
