மும்பை: மும்பை ஓர்லி பகுதியில் உள்ள நேரு மையத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில்பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “ஆர்எஸ்எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. மண்டல மற்றும் பிரிவு தலைவர்கள் அமைப்பின் தலைவரை நியமிக்கிறார்கள்.
பொதுவாக, 75 வயது முடிந்த பிறகு, எந்த பதவியும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும். நான் 75 வயது கடந்து விட்டதை அமைப்புக்கு தெரிவித்து விட்டேன். ஆனால், அவர்கள் என்னை தொடர்ந்து பணியாற்றும்படி கேட்டு கொண்டனர். அவர்கள் என்னை பதவி விலக சொன்னால் நான் விலக தயார்” என்றார். “இந்த அமைப்பின் தலைவர் எஸ்சி, எஸ்டி பின்னணியை கொண்டவராக இருப்பாரா? என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
தலைவரை நியமிப்பர்களிடமே அதற்கான முடிவு உள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய மோகன் பகவத், “மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுக்கு, மத மாற்றம், ஊடுருவல் மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் ஆகிய மூன்றும் முக்கிய காரணங்கள். கருவுறுதல் விகிதம் 2.3க்குகீழே குறையும்போது மக்கள்தொகை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. அந்த வகையில் ஒரு நாடு வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே மக்கள்தொகையில் சமநிலையை பேண ஒவ்வொரு தம்பதியும் மூன்று குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்’’ என்றார்.
