திஸ்பூர்: வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசாமில் வசித்து வரும் வங்க மொழி பேசும் முஸ்லிம்களை மாநிலத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அசாம் மாநில பாஜவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிடப்பட்டது.
அதில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா துப்பாக்கியால் சுடும் நிஜமான காட்சிகளுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில உருவங்களும் இடம்பெற்றிருந்தன. தலையில் குல்லாய் அணிந்திருப்பது போன்ற அந்த உருவங்களை நோக்கி முதலமைச்சர் குறிவைத்துச் சுடுவது போலவும், ‘மன்னிக்கவே முடியாது’, ‘பாகிஸ்தானுக்கு ஏன் செல்லவில்லை?’, ‘வங்கதேசத்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது’ மற்றும் ‘வெளிநாட்டினர் இல்லாத அசாம்’ போன்ற வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
முஸ்லிம்களை ஒரு மாநில முதல்வரே சுட்டுக்கொல்வது போன்ற வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ், ‘மிகவும் வெட்கக்கேடானது, இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில்,சிறுபான்மையினரை முதல்வரே சுட்டுக்கொலை செய்வது போன்ற வீடியோ பல ஆண்டுகளாக பாசிச ஆட்சியாளர்களுக்கு உள்ள கனவின் வெளிப்பாடே,, இது இனப்படுகொலைக்கான அழைப்பு. நீதிமன்றம் தானாக முன்வந்து அசாம் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
