சென்னை: மதுரையை சேர்ந்த ஆதி நாராயணன் மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தனக்கு எதிரான வழக்குகள் குறித்து ஆதி நாராயணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மனுதாரர் மீது மொத்தம் 32 வழக்குகள் இருந்தன. இதில், 18 வழக்குகள் முடிந்து விட்டன. இதுதவிர, 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது என்று தெரிவித்தார். அதற்கு மனுதாரர், இந்த மனு தாக்கல் செய்த பின்னர் தனக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், 2013ம் ஆண்டு முதல் மனுதாரர் மீது வழக்குகள் உள்ளன. இதனால், மனுதாரரின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுகிறது என்றனர். அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். விரிவான விசாரணை நடத்தத் தேவையில்லை என்று வாதிட்டார். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத் துறை சேகரித்த ஆதாரங்களை சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அவற்றை அனுப்ப வேண்டியது கட்டாயம், என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், ஆரம்பகட்ட விசாரணை நடத்தவில்லை என்பதை காரணமாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை ரத்து செய்யக் கோரலாம். அதன் அடிப்படையில் வழக்கும் ரத்து செய்யப்படலாம் என்று தெரிவித்தனர். அதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அமலாக்க துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற காலவரம்பும் உள்ளது என்றார். இந்த மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. எனவே, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று யாரும் கோர முடியாது என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
