இந்தியாவில் முதன்முறையாக சென்னை ஐஐடியில் புற்றுநோய் மரபணு தரவுதள தகவல்: இயக்குநர் காமகோடி வெளியிட்டார்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில், இந்தியாவில் முதன்முறையாக புற்றுநோய் மரபணு தரவு தள தகவல்களை ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று வெளியிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருக்கக்கூடியவர்களின் மரபணுக்கு ஏற்ற வகையில் புற்றுநோய் சிகிச்சை முறையை வழங்கும் வகையில் புற்றுநோய் மரபணு தரவு தளத்தை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் புற்றுநோய்களின் வகைகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் ஜீன்கள் வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்து மற்றும் சிகிச்சை முறை குறித்தும் இந்த தரவு தளத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் காணப்படும் பல்வேறு புற்றுநோய்களுக்கு உரிய மரபணு தகவல்கள் முழுமையாக பதிவாகவில்லை. இதனால், நோயறிதல் கருவிகள் மற்றும் மருந்து ஆராய்ச்சிகளுக்குத் தேவையான முக்கியமான தரவுகள் குறைவாகவே இருந்தன. இந்த குறையை சரி செய்யும் நோக்கில், சென்னை ஐஐடி 2020ம் ஆண்டு இந்திய புற்றுநோய் மரபணு திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட லுகேமியா, பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வு செய்து, முழு மரபணு வரிசைமுறை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட இந்திய புற்றுநோய் மரபணு தரவுத்தளம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்குப் பயன்படும் வகையில் bcga.iitm.ac.in என்ற இணையதளத்தில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஜீனோம் அட்லஸ் மூலம் முதற்கட்டமாக 1500 மாதிரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது, எவ்வாறு வளர்கிறது என்பதற்கான மரபணு அடிப்படை விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்த ஆய்வு, தேசிய புற்றுநோய் துல்லிய மருத்துவ மையத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இது சென்னை ஐஐடி மற்றும் கார்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து செயல்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த திட்டம், எதிர்காலத்தில் மலிவு விலையில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் உருவாக்கப்படுவதற்கும், மருத்துவ ஆராய்ச்சிகள் விரைவாக முன்னேறுவதற்கும் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: