தேனி, ஜன. 14: ஆடுகளை தாக்கும் தொற்றுநோய்களை வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோயாகும். இது மொரிபீ வைரஸ் எனும் வகையைச் சேர்ந்த வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்தியாவில் அறவே ஒழிக்கப்பட்டுவிட்ட வெக்கை நோய் வைரஸ் கிருமியும் இந்த வகையைச் சார்ந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு 3 அல்லது 4 நாட்கள் அதிக அளவிலான காய்ச்சல் நீடிக்கும்.
சோர்வுடன் தீனி உட்கொள்ளாத நிலையை அடையும். மூக்கில் இருந்து சளி வடிந்து உறைந்திருக்கும். கண்களில் பூளை தள்ளும். வாயின் உட்புறங்கள், ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரக்கும். கழிச்சல், இருமல், குட்டிகளில் அதிக அளவில் இறப்பு இருக்கும்.நோய் உள்ள இடங்களில் இருந்து ஆடுகள் வாங்கி புதிததாக மந்தையில் சேர்ந்தால் பிற ஆடுகளுக்கு இந்நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். நோய் பாதித்த ஆடுகள் இருமம் போது வெளிப்படும் சளி மற்றும் உமிழ்நீர் போன்றவை காற்றில் கலந்து மற்ற ஆடுகளின்மீது படும்போது நோய் தொற்றிக் கொள்கிறது. நோயுற்ற ஆடுகளில் கண் மற்றும் மூக்கிலிருந்து வடியும் நீர், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றால் இந்நோய் பரவும்.
