சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49வது புத்தகக் காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, புத்தகக் காட்சியில் இந்த புத்தகத்தை விற்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, புத்தகத்தில் களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் உள்ளன. இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா?. மிகவும் தீவிரமான இந்த விவகாரம் தொடர்பான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்காட்சியில் இந்த புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது?. அறிவுசார் தளமான புத்தகக் காட்சியில் இது மாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், புத்தகக் காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. இந்த புத்தகக் காட்சியில் இந்த புத்தகம் விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும் என்றார்.
இதையடுத்து, புத்தக பதிப்பாளர் கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்குமாறு பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும். புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
