சென்னை: ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மறு ஆய்வு குழுவிற்கு படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிடும்போது, படத்தை பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது.
பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்தை பார்த்த 5 பேரில் 4 பேர் அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்கில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக நீதிபதி பி.டி.ஆஷா தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்கப்பட உள்ளது. உயர் நீதிமன்ற வழக்கு பட்டியலில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.
