வருசநாடு: தேனி அருகே இரு மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம், வருசநாடு அருகே தண்டியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள் (40). கூலித்தொழிலாளி. மனைவி தனலட்சுமி. மகன்கள் நீதி (7), தேவா (5). ஜெயபெருமாள் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தனலட்சுமி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு ஜெயபெருமாள் மீண்டும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.
விரக்தியடைந்த தனலட்சுமி நேற்று அதிகாலை 2 மணியளவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மகன்களையும் தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். அருகே தண்டியன்குளம் ஓடைப்பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் முதலில் 2 மகன்களையும் தள்ளி கொன்று விட்டு, பின்னர் தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அந்த வழியாகச் சென்ற கிராமத்தினர் கிணற்றில் தனலட்சுமியும், மகன்களும் தண்ணீரில் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக வருசநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
