தமிழ்நாட்டுக்கு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய 2.76 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தல்

சென்னை: கர்நாடகா ஜனவரி மாதம் வழங்க வேண்டிய 2.76 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 47வது கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு உறுப்பினர், தற்பொழுது (6.1.2026) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 65.360 டி.எம்.சி ஆக உள்ளது என்றும், அணையில் இருந்து வினாடிக்கு 8,400 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பர் மாதம் கடைசி வாரத்திலும் மற்றும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும் டிட்வா புயலினால் பெய்த கன மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மறுநடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதிகளுக்கு நீர் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார். கர்நாடக அணைகளின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு 2026, ஜனவரி மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 2.76 டி.எம்.சி நீரினை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினர்.

Related Stories: