சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு தண்டனை மீண்டும் ஏப்.6க்கு தள்ளிவைப்பு: மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளிக்கான தண்டனை மீண்டும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19.6.2020 அதிமுக ஆட்சி காலத்தில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக சாத்தான்குளம் போலிசாரால் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் கொரோனா தாக்குதலில் பால்துரை உயிரிழந்தார். மற்ற 9 பேர் மீதான வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத் நீதிபதி ஜி.முத்துக்குமரன், 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என மார்ச் 23ம் தேதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்களை மார்ச் 30ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தண்டனை விபரங்களை ஏப்.2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதன்படி இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமைச் செயலாளர் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல், ‘குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். அரிதினும் அரிதான காவல் கொடூர கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது’’ என்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘5 ஆண்டுகள் சிறையில் உள்ளதை கணக்கில் கொள்ள வேண்டும்,

பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் காவலர்களை கேள்வி எழுப்பியதால் தான் பிரச்சனை ஏற்பட்டதாக சாட்சியம் உள்ளது. கொலை செய்யும் நோக்கில் தாக்கவில்லை. உள்நோக்கம் எதுவுமில்லை. குடும்ப பிண்ணனியும் வாழ்வாதாரத்தையும், கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். ஒருவரை சமுதாயத்தில் வாழவே தகுதியற்றவர்; அவரை திருத்த இயலாது எனும் முடிவுக்கு வரும் போது தூக்கு தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். இது நோக்கமின்றி நிகழ்ந்த மரணம்.

குற்றத்தின் தன்மை, குற்றவாளியின் பின்புலம், தண்டனைக்கு முன் சிறையில் இருக்கும் காலத்தில் அவரது நடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் வாழ தகுதியற்றவரா? என்பதை பரிசீலித்து, அரிதான வழக்கின் கீழ் வகைப்படுத்த வேண்டும். 9 மணியில் இருந்து விடிய விடிய அடித்துக் கொண்டே இருந்ததனர் என்பது ஏற்புடையது அல்ல. தண்டனையை குறைத்து வழங்கிட வேண்டும். குற்றவாளிகளை திருந்தி வாழ வைக்கும் வகையிலான தண்டனைகளை வழங்க வேண்டும். தூக்கு தண்டனை சம்பந்தப்பட்ட வழக்கின் குற்றவாளியை திருத்தலாம். ஆனால் வாழவைக்காது.இவ்வாறு கூறினார்.

பின்னர் ஜெயராஜின் மனைவி தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘‘இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்காகவே கருதப்பட வேண்டும். முழு இரவும் வைத்து அடித்திருக்கிறார்கள். அதற்கு கொடூர ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என குற்றவாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆயுதங்கள் பயன்படுத்தினால் கூட அந்நேரமே முடிந்துவிடும். ஆனால் லத்தியால் தாக்கியிருக்கிறார்கள்.

பல மணி நேரம் விசாரணை எனும் பெயரில் லத்தியால் தாக்கப்பட்டது கொடூரமானது. கொடூர மனநிலையிலேயே காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர். ஆகவே, இதனை அரிதினும் அரிதான வழக்காகவே கருதி, உட்ச பட்ச தண்டனையை வழங்க வேண்டும்’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 9 போலீஸ்காரர்களுக்குமான தண்டனை விபரத்தை வரும் ஏப்.6ம் தேதி தெரிவிப்பதாக கூறி தள்ளி வைத்தார்.

Related Stories: