திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக எம்பி கனிமொழி நேற்று வந்தார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பிறகு, திருப்புவனம் பகுதிக்கு பிரசாரத்திற்கு வந்தார். அப்போது திருப்புவனம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே மருத மரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது, கனிமொழி வாகனத்திலிருந்து கீழே இறங்கி, காத்திருந்து ஒத்துழைப்பு வழங்கினார். பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை செய்து விட்டு அனுப்பி வைத்தனர்.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று பிரசாரத்துக்காக திருவெறும்பூர்- வேங்கூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 5 நிமிடம் வரை நீடித்தது. காரில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்து காரில் அன்பில் மகேஷ் புறப்பட்டு சென்று தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
