திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அங்கு அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தினார். அவரது பிரசாரத்தில் பெண்கள், சிறுவர்கள் மயக்கம் அடைந்தனர். 20 செல்போன்கள் திருட்டு போனது. விஜய்யை பின்தொடர்ந்த வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவக்கினார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.2ம் தேதி விஜய் வேட்பு மனுதாக்கல் செய்வார் என்றும், அதன்பிறகு பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணிக்கு விஜய் திருச்சி விமான நிலையம் வந்தார். வெளியே வந்த விஜய், அங்கு தயாராக நின்ற பிரசார வாகனத்தில் ஏறினார். அந்த வாகனத்தில் ஏற்கனவே இருந்த கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் வழக்கறிஞர்களுடன் சுமார் 20 நிமிடம் வரை விஜய் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள பாலக்கரைக்கு புறப்பட்டார். திடீரென வாகனத்தில் ஏறி நின்றபடியே சாலையின் இருபுறமும் நின்று கட்சியினரை பார்த்து கையசைத்தபடி தடையை மீறி ரோடு ஷோ நடத்தினார். அப்போது, தவெக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்ட டூவீலர்களில் திருச்சி- புதுக்கோட்டை சாலையில், அதாவது எதிர் திசையில் அதிவேகத்தில் சாலை விதிகளை மீறி வந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர்.
அப்போது, சுப்பிரமணியபுரம் பகுதியில் வந்தபோது, டூவீலர்கள் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இதை பார்த்தும் அவர்களை அவ்வாறு வராதீங்க என்று விஜய் சொல்லவில்லை. அவர்களை பார்த்து கையசைத்தபடியே வந்தார். சரியாக 11.25 மணிக்கு விஜய் வாகனம் வேட்பு மனு தாக்கல் செய்யும் மாநகராட்சி 2வது மண்டலக்குழு அலுவலகத்திற்கு வந்தது. நல்ல நேரம் பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை என்பதால் விஜய் சுமார் அரை மணி நேரம் பிரசார வாகனத்திலேயே காத்திருந்தார்.
பின்னர் 12 மணிக்கு அலுவலகத்துக்குள் சென்ற விஜய், அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமுருகேச பாண்டியனிடம் 12.20 மணிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல் குமார், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உடனிருந்தனர். மாற்று வேட்பாளராக கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி (சஞ்சீவி) மனு தாக்கல் செய்தார்.
பின்னர் 12.30 மணிக்கு வெளியே வந்த விஜய், மீண்டும் ரோடு ஷோவாக பிரசாரம் செய்ய உள்ள மரக்கடைக்கு சென்றார். திருச்சி தபால் நிலைய ரவுண்டானா வந்ததும் விஜய் பிரசார வாகனத்திற்கு உள்ளே சென்று விட்டார். திடீரென மேலப்புதூர் பாலம் பகுதியில் மீண்டும் பிரசார வாகனத்தின் மேலே வந்தார். விமான நிலையத்தில் இருந்து மரக்கடை வரை விஜய் வாகனத்தை ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர். மரக்கடையில் எம்ஜிஆர் சிலைக்கு அருகே விஜய் பேச திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு வந்ததும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார்.
பின்னர், பகல் 12.41 மணிக்கு பேச தொடங்கிய விஜய் 12.53 வரை சுமார் 13 நிமிடம் மட்டும் பேசினார். இதில் ஒன்றிய அரசை பற்றி அவர் வாயே திறக்கவில்லை. வழக்கம் போல் திமுகவை மட்டுமே விமர்சித்தார். விஜய் பேசும்போது, அவருக்காக காலை முதலே வெயிலில் காத்திருந்த பெண்கள், சிறுவர்கள் மயங்கி விழுந்தனர். குடிநீரின்றி மயங்கி விழுந்தனர். விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போது, 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போனது.
விஜய்யை பார்க்க சென்டர் மீடியன்களை தவெகவினர் உடைத்து அட்டகாசம் செய்தனர். தவெக தொண்டர்கள் அட்ராசிட்டியால் மக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். பிரசாரம் முடித்துவிட்டு, காந்தி மார்க்கெட், பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக விமான நிலையம் வந்தார். உடனே, அவரது ரசிகர்கள் விமான ஓடுபாதை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் ஏறி விமானத்திற்குள் இருந்த விஜய்க்கு கை அசைத்தது வேடிக்கையாக இருந்தது.
* விஜய் மீது 2 வழக்குகள்: வேட்புமனுவில் மறைத்தது அம்பலம்
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய் கடந்த 30ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனக்கு ரூ.624 கோடி சொத்து இருப்பதாகவும், தனது அப்பா, அம்மா, மகன், மகளுக்கு பல கோடி கடன் கொடுத்திருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறியிருந்தார். தன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். ஆனால் நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 2 வழக்குகள் இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கலை தொடர்ந்து கொளத்தூரில் நடந்த பிரசாரத்தில் அனுமதியை தாண்டி கூட்டத்தை கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் விஜய் மற்றும் 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் மதுரை தவெக மாநாட்டில் விஜய் நடைமேடையில் நடந்து வரும் போது ஆர்வத்தில் நடைமேடை மீது ஏறிய நபரை 10 பவுன்சர்கள் இடித்து தள்ளி அவதூறாக திட்டியது தொடர்பாக அந்த நபர் புகார் அளித்திருந்தார்.
அது தொடர்பாக வழக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கு குறித்து பெரம்பூர் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் விஜய் எதுவும் குறிப்பிடவில்லை. அதேசமயம் இந்த வழக்கு குறித்த விபரம் தற்போதுதான் தெரியவந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
* ரோட்டில் திடீரென இறங்கிய விஜய்
திருச்சி மேலப்புதூர் பாலத்துக்கு அடியில் விஜய்யின் பாதுகாப்பு வாகனம் ஒரு டூவீலரில் உரசியதாக தெரிகிறது. இதில் டூவீலரிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்தார். இதை பார்த்த விஜய் உடனே வாகனத்திலிருந்து இறங்கி வந்து பெண்ணிடம் நலம் விசாரித்தார். பின்னர் விஜய் வாகனத்தில் ஏறிச்சென்றார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். விஜய் செல்லும் இடங்களில் பலர் காயமடைந்து வருவது வழக்கம்.
கடந்த முறை செங்கிப்பட்டில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு விஜய் வரும் போது, அவரை பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார். எங்கேயும் செல்லாத விஜய், டூவீலரில் இருந்து விழுந்ததும், உடனே விஜய் வாகனத்தை நிறுத்தி ஆறுதல் கூறியது தவெகவினர் செய்த நாடகம் தான் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
* விசில் சத்தத்தால் தேர்வெழுத முடியாமல் மாணவர்கள் அவதி
திருச்சி மரக்கடையில் உள்ள அரசு சையது முர்துசா பள்ளியில் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பொது தேர்வு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. இதன் அருகே விஜய் பிரசாரம் நடந்தது. இதற்காக அந்த பகுதியில் காலை முதலே தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். இவர்கள் விஜய் வருவதற்கு முன்னே கூச்சலிட்டபடி இருந்தனர். மேலும் விசிலை தொடர்ந்து ஊதிக் கொண்டே இருந்தனர். இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
* ஜோசியர் சொன்ன நேரத்தில் மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விஜய் நல்ல நேரம் பார்த்து மனு தாக்கல் செய்தார். நேற்று பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை அபிஜித் நேரம். அதற்குள் மனு தாக்கல் செய்தால் பலன் கிடைக்கும் என திருப்பூரை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் விஜய்க்கு ஆலோசனை வழங்கி இருந்தாராம். அந்த ஆலோசனையின்படியே விஜய் 12.20 மணியளவில் மனு தாக்கல் செய்துள்ளார். அபிஜித் என்பது வெயிலின் தாக்கம் உச்சியில் இருக்கும்போது வரும் 30 நிமிட காலமாகும். இது சகல தோஷங்களையும் நீக்கி, வெற்றி பெற, புதிய முயற்சிகளை தொடங்க உகந்த நேரம் என்று அந்த ஜோதிடர் கூறி இருந்தாராம்.
* போலீஸ் நடவடிக்கையால் விரைவாக சென்ற விஜய்
கடந்தாண்டு செப்.12ம் தேதி விஜய் திருச்சி வந்த போது கூட்டம் அதிகளவில் இருந்தது. விமான நிலையத்தில் அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால், அங்குள்ள பேரிகார்டுகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். தொடர்ந்து, விஜய் வாகனத்தை ரசிகர்கள், தொண்டர்கள் சுற்றி நின்று செல்ல விடாமல் அட்டகாசம் செய்ததாலும், வாகனங்களில் பின் தொடர்ந்ததாலும் திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து விஜய் மரக்கடைக்கு வருவதற்கு சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஆனால், நேற்று விஜய் திருச்சி வந்தபோது, விமானநிலையத்திற்குள் தொண்டர்கள், ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஜய் விமான நிலையத்தில் இருந்து மனு தாக்கல் செய்யும் அலுவலகம் செல்லும் வரை அவரது வாகனத்தை ரசிகர்கள், தொண்டர்கள் பின் தொடர விடாமல் போலீசார் அரணாக நின்றிருந்தனர். அதை மீறி வந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், நேற்று சுமார் 1 மணி நேரத்துக்குள் பாலக்கரைக்கு வந்து விட்டார். இதை விஜய்யுடன் இருக்கும் பவுன்சர்கள் செய்தாலே, பல உயிரிழப்புகளை தடுக்கலாம். ஆனால் அவர் செய்வதில்லை.
* ஆதவ் கார் மோதி காவலர் கால் முறிவு
மரக்கடையில் விஜய் பிரசாரம் முடிந்து புறப்பட்டபோது தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா பயணித்த கார் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் சதீஷ் காலில் ஏறியது. இதில் வலது காலில் முறிவு ஏற்பட்டதால் அவரை சிலர் தூக்கி ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த கார் டிரைவர் அரவிந்த் (32) மீது 2 பிரிவின் கீழ் ேபாலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* விஜய்க்கு ரூ.6 லட்சத்தில் பங்களா
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய்க்காக, அரியமங்கலம் பால்பண்ணை அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு தவெகவினர் எடுத்துள்ளனர். விஜய் பிரசாரத்துக்கு வரும் போது, இங்கு தங்கிக்கொள்வாராம். இதன் மாத வாடகை ரூ.6 லட்சம். அட்வான்சாக ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பால்பண்ணை அருகில் தவெகவுக்கு தேர்தல் அலுவலகத்துக்காக ஒரு கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
