திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணியகாலம் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் உத்தராயணம் மற்றும் புண்ணியகால உற்சவம் வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

வழக்கமாக அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணியகால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி உத்தராயண புண்ணியகால உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

தொடர்ந்து 5.42 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றினர். அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவின் நிறைவு நாளான வரும் 15ம்தேதி (தை முதல் நாள்) தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து 16ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மிகவும் பிரசித்திபெற்ற திருவூடல் உற்சவமும், 17ம் தேதி மறுவூடல் உற்சவமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: