ஆங்கில புத்தாண்டு பிறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு 570 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறப்பு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 570 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆங்கில புத்தாண்டு பிறப்பு) தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 240 பேருந்துகளும், நாளை 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை மொத்தம் 55 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப வரும் 3ம் தேதி அன்று 525 பேருந்துகளும் மற்றும் 4ம் தேதி அன்று 765 பேருந்துகளும் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரத்தில் இன்று 11,502 பயணிகளும், நாளை 8,380 பயணிகளும், நாளை மறுநாள் 11,135 பயணிகளும் வரும் 2ம் தேதி 7,501 பயணிகளும், 3ம் தேதி 10,794 பயணிகளும் மற்றும் 4ம் தேதி 19,216 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செயலியில் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: