சென்னை: மலேசியாவில் இருந்து தனி விமானத்தில் நேற்றிரவு சென்னை திரும்பிய நடிகர் விஜய்யை, வரவேற்க வந்திருந்த விஜய் ரசிகர்கள், கட்சித் தொண்டர்களால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கிய நடிகர் விஜய், கால் தவறி கீழே விழுந்தார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தலைவர் நடிகர் விஜய், மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, சென்னையில் இருந்து தனி விமானத்தில், மலேசியா சென்று இருந்தார்.
அங்கு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு, நேற்றிரவு 9.15 மணி அளவில், கோலாலம்பூரில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார். குடியுரிமைச் சோதனை சுங்கச் சோதனை போன்றவை நடத்த இருந்ததால், விஜய் மற்றும் அவருடன் வந்தவர்கள் சென்னை சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2 பகுதிக்கு வந்து, சோதனைகளை முடித்துவிட்டு, சாதாரண பயணிகள் வரும் கேட் எண் ஐந்து வழியாக வெளியில் வந்து கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே நடிகர் விஜய்யுடன், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கூட்டமாக வெளியில் வந்தனர். விஜய் சென்னை வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் வருகைப் பகுதி கேட் எண் 5 அருகே திரண்டு இருந்தனர். விஜய் ஐந்தாம் எண் கேட்டிலிருந்து வெளியில் வந்ததும், கூட்டத்தினர் ஒட்டுமொத்தமாக தடுப்புகளை தள்ளி விட்டு விஜய்யை சூழ்ந்து கொண்டனர். இதனால் பாதுகாப்புக்கு வந்த மத்திய தொழில்பதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் திக்குமுக்காடினர்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய், கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக போலீசாரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விஜய்யை தாங்கிப் பிடித்துக் கொண்டு வந்து, அவசரமாக காரில் ஏற்றினர். ஆனாலும் கூட்டத்தினர் காரை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் கார் அங்கிருந்து புறப்பட முடியாமல் சில நிமிடங்கள் நின்றது. அதன் பின்பு போலீசார் கூட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்து, விஜய் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் பெரும் பரபரப்பானது. சென்னை விமான நிலையத்தில் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த துபாய், பக்ரைன், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட விமானப் பயணிகள் வெளியில் வர முடியாமல் பெரும் சிரமம் அடைந்தனர். அவ்வாறு வெளியில் வந்த பின்பும் அவர்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு செல்வதற்கும் கடும் சிரமம் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இதை போல் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வெளி ஆட்களை எப்படி அனுமதித்தனர்? போலீசார், பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பயணிகள் கடும் ஆத்திரத்துடன் கேள்விகள் கேட்டனர்.
