சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மூலம் ஓராண்டில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வந்தது. இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்வதற்கு வருகிற மக்களவை கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜ அரசு மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக செய்தி வெளிவந்திருக்கிறது.
மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி பேசுகிற பல நேரங்களில் காந்தியடிகளை புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாலும் மகாத்மா காந்தியின் புகழை சிதைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலினால் இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி பெயரில் இருக்கிற இத்திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தேசத்தின் தந்தையின் பெயரை விட இத்திட்டத்திற்கு வேறு எந்த பெயர் பொருத்தமாக இருக்க முடியும்?
நீங்கள் வைக்கப் போகிற புதிய பெயரை வேறு ஏதாவது ஒரு திட்டத்திற்கு நீங்கள் வைக்கலாம். ஆனால், உங்களது நோக்கம் மகாத்மா காந்தி, பண்டித நேரு ஆகியோரின் புகழை வரலாற்றில் இருந்து அழிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு நீங்கள் செயல்படுவீர்களேயானால் உங்களை இந்திய நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
இதனால் காந்தி, நேருவின் புகழை எவராலும் அழிக்க முடியாது. ஆனால், இத்தகைய வரலாற்று திரிபுவாத முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறாது. மகாத்மா காந்தியின் பெயரை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளினால் ஏற்படுகிற விளைவுகளுக்கு பாஜகவே பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
