சென்னை: காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் எம்பி, டெல்லியில் இருந்து நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு முனையம் வந்தார். பின்னர், டெர்மினல் 4 வழியாக, வெளியில் வந்து, காரில் ஏற முயன்றபோது, டெர்மினல் 4 பகுதிகளில் சுகாதார கேடுகளால் துர்நாற்றம் வீசியுள்ளது. இதை பார்த்த ப.சிதம்பரம், தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 4, சுகாதார சீர்கேடுகளுடன், துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது. சென்னை விமான நிலைய மேலாளர்கள், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள், மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கவனத்திற்கு வரவில்லையா, இந்த துர்நாற்றத்தை அவர்கள் எப்படி சகித்துக் கொண்டு, அங்கு இருக்கின்றனர், என்று கண்டித்துள்ளார்.
இதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்திற்காக வருந்துகிறோம். விமான நிலையத்தில் குப்பையை, பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, பயணிகள் நடமாட்டம் அதிகமாக இல்லாத நேரம் பார்த்து, சுத்தப்படுத்தி எடுத்து செல்ல, ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
நேற்று காலை அதைப் போல் குப்பையை ஏற்றிக் கொண்டு குப்பை வண்டி சென்ற, அடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு, துர்நாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விமான நிலைய டூட்டி மேனேஜர்கள், விமான நிலையத்தின் சுத்தம் சுகாதாரத்தை, 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், என பதிலளித்துள்ளனர்.
