தமிழ்நாடு பாஜ தேர்தல் சமயத்தில் சிறுபான்மை மக்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறும் வகையில் கடந்த 21ம் தேதி நெல்லை உடையார்பட்டி மைதானத்தில் சிறுபான்மை மாநில மாநாட்டை நடத்தினர். பாளை சட்டசபை தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ளதால், இம்மாநாடு மூலம் சிறுபான்மை மக்களை கவரலாம் என திட்டமிட்டிருந்தனர். மாநாட்டிற்கு பாஜ சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் கோவை ஜான்சன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று பேசினர்.1500 பேர் இம்மாநாட்டில் பங்கேற்க கூடும் என கட்சியினர் தெரிவித்திருந்த நிலையில், சிறுபான்மை மக்கள் புறக்கணித்தனர். 200க்கும் குறைவானவர்களே அழைத்து வரப்பட்டிருந்தனர்.
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், நெல்லையில் இருந்து அவசர வேலை காரணமாக திருச்சிக்கு சென்றார். அவர் வரவில்லை என்று தெரிந்து நிர்வாகிகளும் டபாய்த்தனர். இதனால் இருக்கைகள் அனைத்தும் காலியாக கிடந்தன. மாநாடு என்றாலே எங்கிருந்தாவது ஆட்களை வேனில் ஏற்றி வருவார்கள். இந்த மாநாட்டில் அதற்கும் வாய்ப்பில்லாமல் போனதே என்று வந்த சிலரும் அங்கலாய்த்து கொண்டனர். அதேசமயம் மேடையை ஆக்கிரமித்த நிர்வாகிகள் மட்டும் காலியாக கிடந்த இருக்கைகளை பார்த்து ஆவேசமாக பேசியது வேடிக்கையாக இருந்தது.
