×

ஏசி இல்லாமலே வீடு குளிர்ச்சியாக இருக்க புதிய வழிகாட்டுதல்கள்; விரைவில் வெளியாகிறது

 

சென்னை: ஏசி இல்லாமலே வீடு குளிர்ச்சியாக இருக்க தமிழ்நாடு அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட உள்ளது.
வெயில் காலங்களில் வீடுகளும் அலுவலகங்களும் இனி இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய வழிகாட்டுதல்களை விரைவில் அறிவிக்க உள்ளது. ஏசி பயன்பாட்டை குறைத்து, மின்சார சேமிப்பு மற்றும் வெப்ப அழுத்தத்தை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம். ஏசி, மின்விசிறி போன்ற மின்சாரம் தேவைப்படும் கருவிகள் இல்லாமலேயே, கட்டிட வடிவமைப்பின் மூலமாகவே வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும் முறை இது. நம் முன்னோர்கள் கட்டிய பழைய வீடுகளில் தாழ்வாரம், நடுமுற்றம், உயரமான கூரை எல்லாம் இந்த இயற்கை குளிர்வித்தல் முறையின் அடிப்படையிலேயே கட்டப்பட்டன. இப்போது நவீன அறிவியல் மூலம் அதையே மீண்டும் கட்டிட விதிகளில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது. அதன்படி,தமிழ்நாடு அரசு வெளியிட உள்ள வழிகாட்டுதல்களில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. ஜன்னல்கள் மற்றும் கூரைகளுக்கு போதுமான நிழல் தரும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். இதனால் நேரடி வெயில் உள்ளே புகுவதை தடுக்கலாம். கட்டிடத்தில் சரியான இடங்களில் ஜன்னல்கள், கதவுகள் அமைப்பதன் மூலம் இயற்கையாகவே காற்று சுழலும். இதனால் உட்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.எந்த திசையில் கட்டிடம் கட்டப்படுகிறது என்பதை வைத்து, வெயில் குறைவாக உள்ளே வரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

கூரையில் சூரிய ஒளியை திரும்ப அனுப்பும் வெள்ளை நிற சிறப்பு வண்ணம் பூசுவதன் மூலம் உட்புற வெப்பம் கணிசமாக குறையும்.வெப்பத்தை வெளியே வைத்திருக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். இது வெறும் கோட்பாடு மட்டுமல்ல ஏற்கனவே நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை பெரும்பாக்கத்தில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களின் கூரையில் சோலார் ரிஃப்ளக்டிவ் வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டது. இதன் விளைவாக, கோடை காலத்தில் உட்புற வெப்பநிலை 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது இந்த சாதனை உலக அளவிலான UNEP (ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்) அமைப்பிடம் இருந்து பாராட்டு பெற்றது. இதே முறையை பயன்படுத்தி, வகுப்பறை வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைந்தது. 202526 பட்ஜெட்டில், 300 பள்ளிகளில் இந்த குளிர் கூரை நிறுவ அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘‘இந்த வழிகாட்டுதல்களை கட்டாயமாக்க விரும்பவில்லை. கட்டாயமாக்கினால் மக்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு உணர்வு வரும், அவர்கள் அதை பின்பற்ற மறுப்பார்கள்.

அதனால் முதலில் தன்னார்வ அடிப்படையில் மக்கள் இதை பின்பற்ற ஊக்குவிக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில், மக்கள் தாங்களாகவே இந்த முறைகளை கையாளுவார்கள். அந்த நேரத்தில் ஒரு தீர்வுகளின் தொகுப்பு நம்மிடம் தயாராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த பல அமைப்புகள் ஒன்றிணைகின்றன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிஎம்டிஏ , மாநகராட்சிகள், ஊராட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. மேலும் கட்டிட நிறுவனங்களின் சங்கம் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. இந்த வழிகாட்டுதல்கள் கட்டட விதிகள் மற்றும் மாஸ்டர் பிளான்களில் ஒருங்கிணைக்கப்படும்’’ என தெரிவித்தனர். தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கோடை காலத்தில் சென்னை போன்ற நகரங்களில் வெப்பம் சகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இந்நிலையில் ஏசி பயன்பாடு குறையும் என்பதால் மின்சார செலவு கணிசமாக குறையும். வீட்டிற்குள் இயற்கையாகவே குளிர்ச்சி இருப்பதால் உடல் நலன் மேம்படும். கார்பன் வெளியீடு குறையும் என்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏசி இல்லாமலேயே வாழ்க்கைத் தரம் உயரும்.

 

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED பாஜ சிறுபான்மை அணி மாநில மாநாட்டை புறக்கணித்த தொண்டர்கள்