×

ஆடு மாடு மேய்ப்பவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகலாம்; சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூடாதா? சீமான் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று: வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

 

சென்னை: ஆடு மாடு மேய்ப்பவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகலாம்; சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூடாதா. சீமான் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 234 வேட்பாளர்களையும் திருச்சி மாநட்டில் சீமான் அறிவித்தார். அறிவிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான வேட்பாளர்கள் படித்தவர்கள். மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், பொறியாளர், பொருளாதாரம் எனப் பல்வேறு துறை சார்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் கூட விவசாயி இல்லை. சீமான் செல்லும் இடங்களில் எல்லாம் விவசாயத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கருத்துக்களைப் பதிவு செய்து வருபவர்.

உலக வரலாற்றில் முதல் முறையாக ஆடு மாடுகளுக்கு மாநாடு நடத்தியவர், அதில் ‘‘ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, அது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த வெகுமானம்’’ என்று உணர்ச்சிவசத்துடன் பேசினார்.விவசாயத்தையும் ஆடு, மாடு வளர்ப்பையும் இந்த அளவு தூக்கிப்பிடிக்கும் சீமான், எப்படியும் விவசாயம் செய்பவர்களையும் ஆடு, மாடு வளர்ப்பவர்களையும் முன்னிலைப்படுத்தி, அவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளித்து வேட்பாளர் பட்டியலில் அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில்; ஒருவர் கூட அதில் இடம்பெறவில்லை எனச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

ஆடு மாடு மேய்ப்பவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகலாம்; ஆனால் அரசியல் தளத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூடாதா எனவும் சீமானை நோக்கிக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை அறிவிக்கப்பட்டவர்களில் யாராவது விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் எனில், திரைத்துறையில் இருப்பவர்களை அறிமுகப்படுத்துகையில் நடிகர் எனச் சொல்பவர்; விவசாயிகள் என்று அடையாளப்படுத்தாதது ஏன் எனவும் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகிறார்கள். சீமான் வாக்கு அரசியலுக்காக மட்டுமே விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்த்தலை தூக்கிப்பிடிக்கிறார். ஆனால் அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகவே உள்ளது. மேலும், திராவிடக் கட்சிகள் இவ்வளவு ஆண்டுகள் எதுவுமே செய்யவில்லை எனச் சீமான் விமர்சித்து வரும் நிலையில், அவர் அறிவித்த வேட்பாளர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலும் படித்தவர்கள். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்ததுதான் திராவிடக் கட்சிகள் இவ்வளவு ஆண்டுகள் செய்தது எனவும் சீமானை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

 

Tags : Seeman ,Chennai ,Tamil Nadu Assembly ,Naam Tamilar Party… ,
× RELATED பாஜ சிறுபான்மை அணி மாநில மாநாட்டை புறக்கணித்த தொண்டர்கள்